Sunday, March 21, 2010

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்...

புதுமைப்பித்தன் அவர்களின் படைப்புகளில் மிகவும் கவர்ந்தது....


---------

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

---------------

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

--------------

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.
- புதுமைப்பித்தன்

Sunday, March 07, 2010

"சாஸ்வதச் சுழற்சித் தத்துவம்"


“நீச்சே சொன்னார்...” நம்புதிரி தொடர்ந்தார். “பொருள் அல்லது ஜடம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது. காலமோ முடிவேயில்லாதது. பிரபஞ்சத்தில் உள்ள ஜடம் எவ்வளவு பிரம்மாண்டமான அளவு கொண்டதாய் இருந்தாலும் காலப் பெருவளியின் முன் அதை வைத்தால் மிக அற்பமானது தான் அது.” நம்பூதிரி கையை வீசிக்காட்டிப் பேசினார். “இந்த அறை, மேஜை, புஸ்தகங்கள், நீங்கள், நான், நம் குரல், நம் மொழி வார்த்தைகள், அவற்றின் அர்த்தம் - அனைத்துமே ஜடத்துள் அடங்கிய பல்வேறு எண்ணிலடங்காத கூறுகள் பரஸ்பரம் பின்னியும், இணைந்தும் உருவானவை தாம். பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் ஜடத்தில் ஏற்படும் அலைகள் தாம். எட்டு புறங்கள் கொண்ட கியூபுக்கே பல லட்சம் காம்பினேஷன்கள் உண்டு. பற்பல கோடி காம்பினேஷன்கள் இருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத அளவு...”

நம்பூதிரி என்னை உற்றுப் பார்த்தார். “ஆனால் ஜடத்துக்கு எல்லையுண்டு. எனவே அதன் பற்பல துணுக்குகளின் இணைப்புகளினால் ஏற்படும் சம்பவங்களுக்கும் எல்லை உண்டு. காம்பினேஷன்கள் அனந்தகோடி இருக்கலாம். ஆனால் அவை ஒரு நால் நிச்சியம் தீர்ந்து போகும். பிறகு?”

“அய்யோ!” என்றான் பரமு பயத்துடன்.

நம்பூதிரி அவனை அசட்டை செய்து, “பிறகு?” என்றார். “காலத்துக்கு முடிவேயில்லை. அப்போது என்ன ஆகும்? ஒரு முறை நிகழ்ந்த காம்பினேஷன்கள் மீண்டும் நிகழும்; நிகழ்ந்தே ஆகவேண்டும்; இல்லையா? ஜடத்தில் ஏற்ப்படும் பலகோடி காம்பினேஷன்களின் விளைவாய் அப்பன் நம்பூதிரி ஜெயமோகனிடம் பேசும் இந்தச் சம்பவம் நிகழ்கிறது. அப்படியானால் இதே சம்பவம் இப்படியே மீண்டும் நிகழ்ந்தாக வேண்டும். இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்க வேண்டும். இது காலத்தின் முடிவற்ற ஓட்டத்தில் தொடர்ந்து நிகந்தபடியே இருக்கும். இதுதான் எட்டர்னல் ரிகரன்ஸ் தியிரி. சாஸ்வதச் சுழற்சித் தத்துவம். ரொம்ப சிம்பிள்...”

.
.
.
.

“இதெல்லாம் தப்பு” என்றேன்.

“என்னது?” என்றார் ஆவேசமாய்.

“இந்தத் தத்துவம் தப்பு” என்றேன் அழுத்தமாய்.

.
.,
.
.
“தப்பு என்றால்...? என்ன தப்பு? அதைச் சொல்லு.”

“ஜடம் ஒரு அளவுக்கு உட்பட்டது என்றீர்கள். அப்படியில்லை. ஜடமும் காலம் போலவே அளவற்றதுதான்.”

“என்ன உளறுகிறாய்?”

“உங்களுக்கு ஐன்ஸ்டீனைத் தெரியுமா?”

“கேள்விப்பட்டேன்.”

“E = mc2 என்றால் என்ன தெரியுமா? ஜடமும் சக்தியும் ஒன்றுதான் என்ற தத்துவம் அது. ஜடத்தை ஒளியின் வேகத்தின் இரட்டையால் பெருக்கினால் சக்தியின் அளவு கிடைத்துவிடும்.”

நம்பூதிரி பீதி வசப்பட்டு, “அதெப்படி?”. என்றார்.

“போய்ப் படியும். ஜடம் ஒஅளியின் வேகத்தில் நகர்ந்தால் சக்தி ஆகும். சக்தி ஜடமும் ஆகும். சக்திக்கு எல்லையே இல்லை. ஜடத்துக்கும் எல்லை இல்லை.”

“ஐன்ஸ்டீன் சொல்வது தப்பு.”

.
.
.

- ஜெயமோகன்
“ஜகன்மித்யை” சிறுகதையிலிருந்து.